வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (16:18 IST)

கடத்தப்பட்ட 4 வயது சிறுவனை கண்டுபிடித்த போலீஸார் – ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட குழந்தையை போலீஸார் தேடி மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தில் மண்டபேட்டா பகுதியில் தனது வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்திருக்கிறான் 4 வயது ஜசீத். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜஷீத்தை கடத்தி கொண்டு தப்பித்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் துரத்தி பிடிக்க முயன்றும் முடியவில்லை.

உடனடியாக இது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்கள். சிறப்புப்படை அமைத்து சிறுவனை தேட தொடங்கினர் காவல் துறையினர். சிறுவன் கடத்தல் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சிறுவனின் பெற்றோர் வெங்கட்ராமன் மற்றும் நாகவள்ளி வங்கியில் பணிபுரிபவர்கள் என்பதால் பணத்திற்காக கடத்தியிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் கடத்தியவர்கள் எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை.

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள குட்டுலுகுரு என்னும் பகுதியில் சிறுவன் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸ் சிறுவனை மீட்டனர். கடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி போலீஸுக்கு தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் தன்னை கடத்தியவர்களில் ஒருவர் பெயர் ராஜு என்பதை மட்டும் சிறுவன் போலீஸிடம் சொல்லியிருக்கிறான். சிறுவனை என்ன நோக்கத்திற்காக அவர்கள் கடத்தினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.