1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (02:13 IST)

முச்சந்தியில் மக்களின் தண்டனையை ஏற்க மோடி தயாரா? : லாலு கேள்வி

முச்சந்தியில் நின்று மக்களின் தண்டனையை ஏற்கும் நாளை எதிர்பார்த்து தயாராக இருக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.


 

கடந்த நவம்பர் 8ஆம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோடுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் சில்லரை தட்டுபாடு மற்றும் பணத்தட்டுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் இன்று வரை மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்சனையில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மாபெரும் போராட்டத்தை நடத்தியது. முன்னதாக மக்களின் ஆதரவை திரட்டும் வகையில், பாட்னாவில் ரத யாத்திரை நிகழ்ச்சி ஒன்றை லாலு பிரசாத் யாதவ் தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் லாலு பிரசாத் கூறுகையில், ”ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், கோவாவில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் இன்னும் 50 நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும் அதன்பின் நிலைமை அனைத்தும் சரியாகி விடும். அவ்வாறு சரியாகவில்லை என்றால் மக்களே எனக்கு தண்டனை கொடுங்கள் என கூறி இருந்தார்.

மோடி கூறிய அந்த 50 நாட்கள் முடிய இன்னும் சில நாட்களே இருக்கின்றன. ஆனால், ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கவே இல்லை.

எனவே, நாட்டை இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியதற்காக, மக்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்க பிரதமர் நரேந்திரமோடி ‘முச்சந்தி’யில் நின்று மக்களின் தண்டனையை ஏற்கும் நாளை எதிர்பார்த்து தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.