1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 ஜூலை 2018 (21:02 IST)

பென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரே வரி விதிக்க முடியுமா? காங்கிரஸிடம் கேள்வி எழுப்பிய மோடி

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலுக்கும், பணக்காரர்கள் பயன்படுத்தும் பென்ஸ் காருக்கும் ஒரேமாதிரியான வரிவிதிக்க முடியுமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவடை விட்டது. ஜிஎஸ்டி குறித்து பாஜக பெருமையாக பேசினாலும், காங்கிரஸ் சாதாரண மக்கள் மீதான வரி சுமை என விமர்சனம் செய்து வருகிறது.   
 
இந்நிலையில் ஜிஎஸ்டி ஓராண்டு நிறைவு குறித்து பேட்டியளித்த மோடி கூறியதாவது:- 
 
மறைமுக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. 17 வரிகள், 23 கூடுதல்வரிகள் இணைக்கப்பட்டு ஒரேவரியாக மாற்றப்பட்டுள்ளன. உற்பத்தி வரி, சேவை வரி, வாட் வரி போன்றவை நீக்கப்பட்டு எளிமையான மறைமுகவரி அமல்படுத்தியுள்ளோம். 
 
மாநில அரசுகள், வணிகர்கள் மற்றும் பிறர் தரப்பில் கொடுக்கப்பட்ட கருத்துக்களை கொண்டு வரிவிதிப்பு முறை சீரமைக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் ஒரே மாதிரியான வரி என்பது சொல்வதற்கு எளிமையானதாக இருக்கும். 
 
காங்கிரஸ் கட்சியில் உள்ள நண்பர்கள் ஜிஎஸ்டி வரியில் ஒரு மாதிரியான வரிவிதிப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். அதை ஏற்கிறோம். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலுக்கும், பணக்காரர்கள் பயன்படுத்தும் பென்ஸ் காருக்கும் ஒரேமாதிரியான வரிவிதிக்க முடியுமா? 
 
400 வகையான பொருட்களின் வரியை குறைத்து உள்ளோம். 150 வகையான பொருட்களுக்கு வரியை நீக்கியுள்ளோம். இதனால், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பலபொருட்களின் விலை குறைந்துள்ளது என்று கூறினார்.