1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (08:52 IST)

உலகக் கோப்பை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! பெண் பலி! – மணிப்பூரில் அதிர்ச்சி!

ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றியை கொண்டாடிய மணிப்பூரில் துப்பாக்கிச்சூட்டில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலமான ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் கத்தாரில் நடைபெற்ற நிலையில் இறுதி போட்டியில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் மோதின. உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பையை வென்றது.

அர்ஜெண்டினாவின் வெற்றியை உலகமே கொண்டாடிய நிலையில் மணிப்பூரிலும் பலர் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள சிங்ஜமே என்ற நகரை சேர்ந்த இபேடாம்பி என்ற பெண் இந்த வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

உடனடியாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் வெற்றியை கொண்டாட யாரோ துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக பெண் மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் குற்றவாளியை பிடிக்கும் வரை பெண்ணின் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit By Prasanth.K