1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (15:04 IST)

பரிகாரம் செய்ய காதலனை பலி கொடுத்த காதலி! – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவில் ஜோதிடத்தை நம்பி காதலனை விஷம் கொடுத்து பலி கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவின் பாறசாலையில் உள்ள மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷரோன்ராஜ். இவர் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரும் களியாக்காவிளை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதியன்று வீட்டில் யாருமில்லை என ஷரோன்ராஜை வீட்டிற்கு வர சொல்லியுள்ளார் கிரீஷ்மா. அங்கு சென்ற வந்தபின் ஷரோன்ராஜூக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் வாய் உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து கிரீஷ்மாவிடம் விசாரித்தபோது வீட்டுக்கு வந்த ஷரோனுக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்ததாகவும், அது காலாவதியாகியிருந்ததால் ஷரோன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாகவும் அவர் கூறி, தன்னையும் கொன்று விடுமாறு அழுதுள்ளார். ஆனால் அவரது வீட்டில் எந்த குளிர்பான பாட்டிலும் இல்லாததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.



இதுகுறித்து கிரீஷ்மாவிடம் தீவிரமாக விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கிரீஷ்மா ஜோதிடத்தில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர். ஷரோனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த கிரீஷ்மா இருவரது ஜாதகத்தையும் ஜோதிடர் ஒருவரிடம் காட்டியுள்ளார். கிரீஷ்மாவின் ஜாதகப்படி முதல் கணவன் இறந்துவிடுவார் என ஜோதிடர் கூறியுள்ளார்.

திருமணமாகி கணவன் இறந்தால் தனது எதிர்காலம் பாதிக்கப்படும் என பயந்த க்ரீஷ்மா வேறு ஒரு திட்டத்தை யோசித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை என சொல்லி ஷரோனை வரவழைத்த அவர் கோவில் ஒன்றுக்கு அவரை அழைத்து சென்று ரகசிய திருமணம் செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து கஷாயம் ஒன்றில் விஷத்தை கலந்து அவரை குடிக்கவும் செய்துள்ளார். இதை மறைக்க காலாவதியான குளிர்பானம் போன்ற கதைகளை சொல்லியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் க்ரீஷ்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதிடத்தை நம்பி காதலனை இளம்பெண் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K