தாவூத் இப்ராஹிம் கோரிக்கை சட்டத்திற்குப் புறம்பாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டது: சரத் பவார்
இந்திய அரசால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் சரண் அடைய விரும்பியது உண்மைதான், ஆனால், அவரது கோரிக்கை சட்டத்திற்கு புறம்பாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டது என சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மகாராஷ்டிர அரசிடம் சரணடைய முன்வந்தார். ஆனால், அதை சரத் பவார் நிராகரித்துவிட்டார் என பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறினார். அவரது இந்த பேச்சு மும்பை மட்டும் இன்றி, இந்திய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பாவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பியது உண்மைதான். ஆனால், தான் சரண் அடைந்தால், தன்னை சிறையில் அடைக்க கூடாது என்றும், மாறாக வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனை சட்டப்படி ஏற்புடையதாக இல்லை என்பதால், அதை நிராகரித்துவிட்டோம் என்றார்.