18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!
புதுடெல்லி ரயில் நிலையம் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (CRPF) கட்டுப்பாட்டுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கும்பமேளாவுக்காக செல்லும் பக்தர்களை கட்டுப்படுத்த போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு டெல்லி போலீசார் உறுதுணையாக இருப்பார்கள் என்றும், தேவைப்பட்டால் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடையும் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அதுவரை CRPF வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva