வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (16:09 IST)

கேரள சினிமா உலகில் தாதாவாக வலம் வந்த நடிகர் திலீப் - அதிர்ச்சி தகவல்கள்

கேரள நடிகை  கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், கேரள சினிமா உலகில் தாதாவாக வலம் வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.


 

 
கேரளாவை சினிமாவை பொறுத்தவரை நடிகர் மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகியோர் வைத்ததே சட்டம் எனக்கூறப்படுகிறது. அங்குள்ள நடிகர் சங்கமான ‘அம்மா’ வில் இவர்கள் மூவரும்தான் முக்கிய முடிவெடுத்து வந்துள்ளனர்.  இதில் பொருளாளராக இருந்தவர்தான் நடிகர் திலீப்.
 
ஏறக்குறைய கேரள திரையுலகையே இவர்கள்  மூவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே மூவரும் வைத்திருப்பதாக தற்போது பலரும் பகீரங்கமாக புகார் கூறி வருகிறார்கள். 
 
அதிலும், தன்னை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும், அவர்களை பழிவாங்காமல் விடமாட்டாராம் நடிகர் திலீப். இயக்குனர் வினயன், நடிகர் திலகன் ஆகியோர் திலீப்பால் நேரிடையாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதில், அனுபவம் வாய்ந்த நடிகரான திலகனை அம்மா-வில் இருந்து நீக்கி அவரை பழிவாங்கினார் திலீப். திலீப் என் எதிரி என பல இடங்களில் திலகன் கூறியுள்ளார்.


 

 
கேரளாவில் அரசியல்வாதிகள், முக்கிய போலீஸ் அதிகாரிகள்  நடிகர்களுடன் நெருங்கிய உறவில் இருந்துள்ளனர். எனவே, நடிகர்கள் தங்களுக்கென ஒரு கும்பலை வைத்துக் கொண்டு, தனக்கு எதிராக செயல்படுபவர்களை மிரட்டி வந்துள்ளனர். இதில், திலீப் மிகவும் முக்கியமானவர் என கூறப்படுகிறது.
 
தனக்கும், காவ்யா மாதவனுக்கும் இடையே உள்ள கள்ள உறவை, தனது மனைவி மஞ்சு வாரியரிடம் தெரிவித்து, தன்னுடைய விவாகரத்திற்கு காரணமான அந்த நடிகையை பல வருடங்களாகவே பழி தீர்க்க திலீப் காத்திருந்தார் எனக் கூறப்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே, அவருக்கு வந்த பல சினிமா வாய்ப்புகளை திலீப் தடுத்து வந்துள்ளார் என்பதே இதற்கு சாட்சி. அதன் பின், பல்சர் சுனிலை வைத்து கடத்தல் திட்டத்தை அரங்கேற்றினார் என்பது தெரிய வந்துள்ளது. 
 
தற்போது அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்க தலைவர் லிபர்ட்டி பஷீர் “திலீப் கைதுக்கு பிறகு கேரள திரையுலகில் மாபியா ராஜ்ஜியம் முடிவிற்கு வந்துள்ளது” எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
திலீப்பின் கைதுக்கு பின், அவரை பற்றி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் வெளிப்படையாக  தற்போது பேச துவங்கியுள்ளனர்.