1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (23:53 IST)

மஹாளய அமாவாசை வழிபாடு ஏன் தெரியுமா?

புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய  அமாவாசை எனப்படும். இந்த காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.
 
மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும்  தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அதனால் வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய  அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
 
மாஹாளய அமாவாசை நாளில் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும்  தட்சிணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம். 
 
அதேபோல், வாய்ப்பு இருப்பவர்கள், கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.