வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (14:48 IST)

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தாய்ப்பால் தினம்...

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தாய்ப்பால் தினம்...

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தாய்ப்பால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


 


அவசர உலகத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்குமுன் குழந்தைப் பராமரிப்பு மற்றும் பல்வேறு காரணங்களை யோசித்து முடிவெடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
 
முன்னரெல்லாம் குழந்தைக்குத் தாய்ப்பால் இயல்பாக கிடைக்கும் உணவாக இருந்து வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பணிபுரியும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதில் சிரமமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பல இளம் தாய்மார்கள் அலுவலகத்தில் பாலூட்ட சரியான இடவசதி இல்லாததால் நிறுத்திவிடுகின்றனர்.   
 
குறைந்தது ஒரு வருடத்திற்காவது வீட்டிலிருந்து தாய் பாலூட்டுவதை, குடும்பத்தினரும், இந்த சமுதாயமும் ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளில் தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த தானத்தைப் போல தாய்ப்பாலும் தானமாக வழங்கப்படுகிறது. அப்படி சேமிக்கப்பட்ட தாய்ப்பால் அநாதைக் குழந்தைகளுக்கும், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. சிலர், தாய்ப்பால் அளித்தால் அழகு போய்விடும் என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு, பாலூட்டும் செயலானது தாய்க்கும் முக்கியமானது.  தாய்ப்பால் ஊட்டாத பெண்களுக்கு மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.  
 
ஒரு நாள் பாலூட்டுவதில் குழந்தையின் இரத்த சர்க்கரை அளவு, நோய் எதிர்க்கும் சக்தி கூடுகிறது. குழந்தையும் தாயும் சேர்ந்தே நன்மை பெறுகின்றனர்.  நம் சமுதாயத்தில் தாய்ப்பாலுக்கு சரியான இடம் கொடுக்கப்பட்டுள்ளதை பல இலக்கியங்களில் இருந்து அறிய முடிகிறது. தாய்ப்பாலில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துப் பொருட்களும் சரியான விகிதத்தில் உள்ளன. மூளை வளர்ச்சி சரியாக அமைய தேவையான புரதங்கள், அத்தியாவசிய கொழுப்புச் சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன.  
 
தாய்ப்பால் இயற்கையிலேயே உடனுக்குடன் புதிதாகக் கிடைக்கும் உணவுப் பொருள் என்பதால் எவ்வித மாசுக்கும் இடமில்லை. மாறாக கிருமிகளைக் கொல்லும் பொருட்களைத் தன்னகத்தே உடையது. குழந்தை பிறந்து 2 ஆண்டுகள் உடல், மன, மூளை வளர்ச்சி அதிவேகமாக இருக்கும். இப்பருவத்தில் குழந்தையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தாய்ப்பால் அளிப்பது தாய்மார்களின் கடமை.  
 
தாய்ப்பால் கொடுப்பது காலம் காலமாகப் பெண்கள் இயற்கையாகவே செய்து வந்த பணி. சமீப காலத்தில் தாய்ப்பால் அளிப்பது பெருமளவில் குறைந்து வருகிறது. ஒரு வருடமாவது தாய் பாலூட்ட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒரு வயதுவரை குழந்தைக்குத் தாய்ப்பால் கட்டாயம் தேவை. தாய் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுகையில் ஒரு பாசப்பிணைப்பு உடல் ரீதியாக ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இப்படி பாசத்தோடு வளரும் குழந்தைகள்தான் நல்ல குழந்தைகளாக வளர முடியும்.  
 
தாய்ப்பால். இதற்கு மாற்று எதுவுமே இல்லை, அதில் உள்ள வெண்மையான திரவப் பொருளே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது, பாலூட்டும் சமயத்தில் பெண்கள் தேவையற்ற மாத்திரைகள் உட்கொள்வது தவறு, தேவைப்படும் போதெல்லாம் உடனடியாக, சுத்தமானதாக, சுகாதாரமாக, நிலையில் கிடைப்பது தாய்ப்பால்.  தாய்ப்பாலில் தேவையான தண்ணீர், சத்து வைட்டமின்கள், மலம் இளக்கி ஆகியன இருப்பதால் குழந்தைகளுக்கு வயிறு உபாதை தவிர்க்கப்படுகிறது. 
 
4 மாதம் முதல் 5 மாதத்திற்கு தாய்ப்பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. குழந்தை வளர வளர சிறிது உணவுடன் தாய் பாலை 2 வயதுவரை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஆஸ்துமா, அலர்ஜி, குழந்தையிலேயே எடை பருமன், குழந்தைப் பருவப் புற்றுநோய், நீரிழிவு வியாதி, வயிற்றுப் போக்கு இவற்றின் அபாயத்திலிருந்து காப்பாற்றப்படுகிறது.  தாயின் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிடோசின் என்கின்ற ஹார்மோன் பாசத்தையும் பந்தத்தையும் வளர்த்து, இரத்த அழுத்த நோயிலிருந்தும் காப்பாற்றுகிறது.  
இத்தனை 
பயன்கள் இருக்கும் தாய்ப்பாலை குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே கொடுப்பது நன்மை பயக்கும்.