Notifications

கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்

Last Modified: Wednesday, 2 July 2014 (23:22 IST)

கரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பவளப் பாறைகள் 20 ஆண்டுகளுக்குள் முற்றாக அழிந்துவிடக் கூடும் என இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (ஐயுசிஎன்) கூறியுள்ளது.

கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்


35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தகவல்களின்படி, 1970களில் இருந்ததைவிட 50 சதவீதம் இந்தக் பவளப் பாறைகள் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. அதிக அளவிலான மீன் பிடித்தலும் நோய்களுமே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், இந்த அழிவு தொடரும் என்றும் ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பவளப் பாறைகள் மீண்டும் வளரும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்
 
“பவளப் பாறைகள் பல நாடுகளையும் மக்களையும் பாதுகாக்கின்றன. அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்கு இந்த பவளப்பாறைகளின் நலன் மிக முக்கியமானது. தவிர, அவை மிக அழகானவை” என்கிறார் ஐயுசிஎன்னைச் சேர்ந்த கார்ல் குஸ்டாஃப் லண்டின்.
 
இந்த ஆய்வுக்காக 1970லிருந்து 2012 வரை பவளப்பாறைகள் இருக்கும் 90 இடங்களில் திரட்டப்பட்ட தகவல்கள் ஆராயப்பட்டன.
 
கரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்
கரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பெரும்பாலான பவளப் பாறைகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிவருகின்றன. அதாவது, உயிரோட்டமான, வண்ணமயமான தோற்றத்திலிருந்து ஆல்கேக்கள் படர்ந்த வெற்றுப் பவளப் பாறைகளாக அவை மாறிவருகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 
இந்த பவளப் பாறைகளில் வசித்துவந்த பல உயிரினங்கள் இல்லாமல் போனதுதான் இந்த பாதிப்பிற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
 
1980களில் பனாமா கால்வாயில் இருந்து பரவியதாகக் கருதப்படும் ஒரு நோயால், அந்தக் கடல் பகுதியில் இருந்த கடல் முள்ளெலிகள் பெரும் எண்ணிக்கையில் அழிந்தன. அதேபோல, பவளப் பாறை இருக்கும் பகுதியில் நடந்த அதிக அளவிலான மீன்பிடித்தலால், கிளி மூக்குக் கொண்ட ஒரு வகை மீனினமும் வெகுவாகக் குறைந்துபோனது.
 
இந்த இரண்டு உயிரினங்களுமே பவளப் பாறைகளில் மேயக்கூடியவை. இந்த இரண்டு உயிரினங்களும் அழிந்து போனதால் அவற்றை ஆல்கேக்கள் மூடி மறைத்தன.
 
இருந்தபோதும், இந்த பவளப் பாறைகள் பாதுகாக்கப்பட்டால், பாதிப்படைந்த பவளப் பாறைகள் மீண்டும் உயிர்க்கும் என்கிறது இந்த ஆய்வு.
 
கரீபியக் கடல் பகுதி மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இம்மாதிரி பவளப் பாறைகள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. கடலின் வெப்ப நிலை உயர்வும் இந்த சேத்த்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
 
கடலின் வெப்பம் உயர்ந்தால், பவளப் பாறைகளின் திசுக்களில் வசிக்கும் ஒரு வகை மெல்லிய ஆல்கேக்களை அவை இழந்துவிடும். இதன் காரணமாக, அவை வெண்ணிறமாக மாறிவிடும்.



Read more on :  
கரீபியன் பவளப் பாறைகள் சுற்றுச்சூழல் Caribbean Endangered Coral Reef