ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ஆண்டு ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 27 டிசம்பர் 2018 (14:28 IST)

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுனம்

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்) - புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி  அன்பர்களே !

கிரகநிலை: குருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் - ராகு தனவாக்கு ஸ்தானத்திலும் - சனி பகவான் சப்தம  ஸ்தானத்திலும் - கேது அஷ்டம ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 
கிரகமாற்றம்: 13.02.2019 அன்று ராகு பகவான் ராசிக்கும் - கேது பகவான் சப்தம ஸ்தானத்திகும் மாறுகிறார்கள். 23.11.2019 அன்று குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
இந்த ஆண்டு அனைத்து விஷயங்களிலும் இருந்த தொய்வு நிலை மாறும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பொது நலக்  காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு  மழலைச் செல்வம் கிடைக்கும். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட  காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள்  நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். உங்களின் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம  காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.
 
குடும்பம்: குடும்பத்தில் குதூகலம் நிறையும். சர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை  மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து  அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். குடும்ப ராசியில் ராகு சஞ்சாரம் இருப்பதால் வெளி மனிதர்களால் அவ்வப்போது சிற்சில பிரச்சனைகள் ஏற்படலாம். இருப்பினும் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தினர் அனைத்து விஷங்களிலும்  உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை  வந்தடையும். மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.
 
பொருளாதாரம்: பங்குச் சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஏற்றுமதி சார்ந்த விஷயங்களில் அனைத்து  லாபங்களையும் பெறுவீர்கள். பணம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சொத்துக்கள் புதிதாக வாங்குவதற்கும் பழையனவற்றை  புதுப்பிப்பதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
 
ஆரோக்கியம்: ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். அதே வேளையில் கடுமையான பணிச் சுமையால் பலருக்கு சரியான நேரத்தில்  உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். சிறு உடல் உபாதைகள் தோன்றி  மறையும்.
 
பெண்மணிகள்: பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத்  தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை  உண்டாகும்.
 
உத்யோகஸ்தர்கள்: உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும்  சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக  ஊழியர்களின் அன்பைப் பெறவும். உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். ராசியை சனி பகவான்  பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.
 
வியாபாரிகள்: வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை  காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை  விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.
 
அரசியல்துறையினர்: அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக்  குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய  பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும்  குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.
 
கலைத்துறையினர்: கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம்  உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும்  அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
 
மாணவமணிகள்: மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.  போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின்  அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.
 
மிருகசீரிஷம் - 3, 4: இந்த ஆண்டு லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு  லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில்  முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.
 
திருவாதிரை: இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில்  முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
 
புனர்பூசம் - 1, 2, 3: இந்த ஆண்டு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும்  உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க  கூடிய சூழ்நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக  காணப்படுவார்கள். 
 
பரிகாரம்: சங்கட சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடவும். முடிந்தபோதெல்லாம் ஔவையார் அருளிய "விநாயகர் அகவல்' துதியை  பாராயணம் செய்யவும். இதனால் பல சங்கடங்கள் தவிடுபொடியாகும்.
 
சொல்ல வேண்டிய மந்திரம்: 'ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்' அன்றாடம் பாராயணம் செய்வது.
மலர் பரிகாரம்: "மரிக்கொழுந்து மலரை" ஏதேனும் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் லக்ஷிமிக்கு சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி  அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.