தியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது - 10
- பட்டுக்கோட்டை பிரபாகர்
பத்து!ஸ்ரீ பழனிசுவாமிகள், வெள்ளியங்கிரி மலையில் மஹா சமாதி அடைந்தார். அவரே, தியானலிங்கத்தை இந்த மண்ணுக்கு வழங்கச் சரியான நபர் சிவயோகிதான் என்று தேர்வு செய்து, அந்தப் பணியை அவரிடம் ஒப்படைக்கவும் செய்தார். வாய் வார்த்தைகளால் அல்ல, உள்ளுணர்வின் பரிமாறலால்! தியானலிங்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான தொழில் நுட்பத்தையும் அவர்தான் அருளினார். குருவின் உத்தரவை ஏற்று தியானலிங்க உருவாக்கப் பணியைத் துவங்கினார் சிவயோகி. ஆனால் அப்போது அவருக்குப் போதிய வாய்ப்புகளும் இல்லை, ஆதரவும் இல்லை. ஆகையால், அவரால் அந்தப் பணியைச் செய்து முடிக்க இயலவில்லை. தனது குருவான ஸ்ரீபழனி சுவாமிகள் தனக்கிட்ட தியானலிங்க உருவாக்கத்தைச் செய்து முடிப்பதற்காகவே, இன்னொரு பிறவி எடுக்க விரும்பிய சிவயோகி, சத்குரு ஸ்ரீபிரம்மாவாகப் பிறப்பை எடுத்தார்.சத்குரு ஸ்ரீபிரம்மாவிடம் தீவிரம் இருந்த அதே அளவுக்குக் கோபமும் இருந்தது. தியானலிங்கம் அமைக்க பலரின் ஆதரவும் ஆத்ம சாதனைகளும் தேவைப்பட்டது. ஆனால், அவரிடம் தன் நோக்கத்தைச் செயலாக்கும் திறன் போதுமான அளவுக்கு இல்லை. உணர்வில் தீவிரமாக இருந்தஅவர், கடுங்கோபத்துக்கும் சொந்தக்காரராக இருந்ததால், தனக்குத் தேவையான ஆதரவுக் கரங்களை ஒன்றிணைக்க முடியாமல் போனது. அவரோடு சேர்ந்து ஆண்களும் பெண்களும் ஆத்ம சாதனைகளில் ஈடுபட்டதை சமூகம் ஆரோக்கியமாகப் பார்க்கவில்லை. தவறான அபிப்பிராயங்களைக் கற்பனை செய்து அவரை எதிர்க்கத் துவங்கினார்கள். ஒரு கட்டத்தில் சத்குரு ஸ்ரீபிரம்மா தன் ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டார். தன் குருவின் நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்கிற உச்சமான கோபத்தில் மனம் போன திசையில் நோக்கம் எதுவுமின்றி நடக்கத் துவங்கினார். அவர் கோபத்தைப் புரிந்துகொண்ட சீடர்கள் சிலர் மட்டும் தொடர்ந்தார்கள். சத்குரு ஸ்ரீபிரம்மா நடந்து நடந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் ஒரு ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார். அப்போதுதான் அவர் தியானலிங்கத்தை இந்தப் பிறவியில் தன்னால் உருவாக்க இயலாது என்பதை உணர்ந்தார். அங்கேயே யார், யார் இதில் முழு மூச்சுடன் ஈடுபடுவது, அவர்கள் அடுத்த பிறவியில் யார், யாரின் கருவில் பிறந்து, வளர்ந்து எப்படி தியானலிங்கத்தின் பணிகளைமுடிக்க வேண்டும் என்று தீவிரமான முடிவுகளை எடுத்தார்.ஆனாலும் இன்னொரு முயற்சி செய்து பார்க்க விரும்பின ஸ்ரீபிரம்மா ஒரு காரியம் செய்தார். வஜ்ரேஸ்வரியில் ஒரு யோகி தன் 26வது வயதில் தன் உடலை உதறியிருந்தார். அவர் பெயர் சதானந்தர். அவர் ஒரு பால யோகி. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் சமாதி நிலையிலேயே இருந்தவர். சமாதி நிலையிலிருந்து வெளியே வந்த சதானந்தர், தனது ஆன்மீக அனுபவங்களைப் பலருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினார்.
ஆனால் அவருக்கு அமைந்த சொற்பமான நான்கைந்து சீடர்களும் அற்பமான சீடர்களாக இருந்தார்கள். அவர்கள் உண்மையான சீடர்கள் இல்லை என்பதை உணர்ந்த பால யோகி கோபம் கொண்டார். அந்தக் கோபத்தில் தன் உடலைத் துறந்தார். சத்குரு ஸ்ரீபிரம்மா தனது வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற பாலயோகியின் உடலை ஒரு கருவியாக உபயோகப்படுத்த நினைத்து, அவர் துறந்த உடலுக்குள் புகுந்துகொண்டார்.