பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கையில் கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் பூர்த்தியடைகிறது.
வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அவன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். சில்பாமிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில் இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமைகளையுடைய கருடனை தரிசிப்பதும் கருட பஞ்சமி விரதத்தைக் கடைப்பிடிப்பதும் சகல பலன்களையும் தரும் என்பதில் ஐயமில்லை.