1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 2 ஜனவரி 2015 (13:21 IST)

விருச்சிகம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடுபவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்கும் போது இந்தப்புத்தாண்டு பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். ரியல் எஸ்டேட், கண்ஸ்டக்ஷன் வகைகளால் லாபம் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைகளை தீர்க்க வழி, வகைப் பிறக்கும்.

ஆனால் 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தாமதமாக முடியும். சொந்த ஊரில் கோவில் கட்டுவது, ஊருக்கு நல்லது செய்வது, குடிநீர் அமைத்துத் தருவது போன்ற முக்கிய காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சின்ன சின்ன மோதலும் வரும். அவ்வப்போது கனவுத் தொல்லை வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும்.
 
சுக்ரனும், புதனும் வருடம் பிறக்கும் போது சாதகமாக இருப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. அவருக்கு வேலைக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. மகளுக்கு நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல துணை அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது, கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். சூரியன் சாதகமாக இல்லாததால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். 
 
ராகு இந்தாண்டு முழுக்க லாப வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களுக்கும் அயல்நாட்டில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். அறிவுப்பூர்வமாக யோசிப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் கொஞ்சம் நிதானித்து எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் பழைய கடனை தீர்க்க வழி பிறக்கும். 
 
நட்பு வட்டம் விரிவடையும். தொட்ட காரியங்கள் துலங்கும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். பெரிய பதவிகளும் தேடி வரும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை பாக்யம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் ஜீன் மாதம் வரை தொடர்வதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

வீடு, மனை வாங்கும் அமைப்பு உருவாகும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த தொகையை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் ஜென்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். 
 
வீண் விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மறதியால் செல்போன், விலை உயர்ந்தப் பொருட்களை இழந்துவிடாதீர்கள். திருட்டு பயம் உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூருக்கு செல்லும் போதும் நகை, ரொக்கங்களை பத்திரப்படுத்திவிட்டு செல்வது நல்லது. ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, நீரிழிவு நோய் வரக்கூடும். உணவுக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. லாகிரி வஸ்துக்களை தவிர்க்கப்பாருங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களை தொற்ற வாய்ப்பிருக்கிறது.  
 
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப சில சீர்த்திருத்தங்களை செய்வீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், மருந்து, உணவு வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஜீன் மாதம் வரை குரு நன்றாக இருப்பதால் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ரெட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

ஆனால் ஜீலை மாதம் முதல் குரு சாதகமாக இல்லாததால் பெரிய முதலீடுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களை சேர்க்க வேண்டாம். திடீரென்று அறிமுகமாகி சில சலுகைத் திட்டங்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். ஏழரைச் சனி நடைபெறுவதால் வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். 
 
புது சலுகைகள் கிடைக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். ஆனால் ஜீலை மாதத்திலிருந்து குரு 10-ல் நுழைவதால் இடமாற்றமும், அதிகாரிகளுடன் மோதல்களும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் வந்துப் போகும். உங்களை விட வயதில் குறைந்த, அனுபவத்தில் குறைவானவர்களுக்கு கீழ் நீங்கள் வேலைப் பார்க்க வேண்டி வரும். ஜீலை மாதம் முதல் உத்யோகத்தில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.மாணவ-மாணவிகளே! 
 
ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபப்படாதீர்கள். கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். முதல் வரிசைக்கு முன்னேறுங்கள். வகுப்பாசியர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்பார்த்தபடி மதிப்பெண் பெற்று விரும்பிய நிறுவனத்தில் உயர்கல்வி மேற்கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நல்ல வேலைக் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஏழரைச் சனி நடைபெறுவதால் காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். போலியான பேச்சில் ஏமாந்துவிடாதீர்கள். இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை ஆழம்பார்த்தாலும், கடின உழைப்பாலும் தொலைநோக்குப் பார்வையாலும் வெற்றியடையச் செய்யும்.