1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Webdunia

விரோதி வருட‌ப் பல‌ன் : மேஷம்

இனிமையான பேச்சால் இழுபறியான காரியங்களையும் அசாத்தியமாக முடித்துக் காட்டும் மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் அங்காரகனின் ஆதிக்கத்தில் இந்தாண்டு பிறப்பதால் தெள்ளத் தளிவாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். ராகு, கேது, சனி, குரு ஆகிய பெரிய கிரகங்கள் சரியில்லாத நேரத்தில் இந்த விரோதி ஆண்டு பிறப்பதால் முற்பகுதி கொஞ்சம் சவாலாக இருக்கும். செலவினங்களும், அலைச்சலும் அதிகமாகும். ஆனால் பிற்பகுதி உங்களை சாதிக்க வைக்கும்.

வருட பிறப்பின் போது சுக்ரன் உச்சமாகி 12-ல் மறைந்ததால் குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல் குழப்பங்கள் எல்லாம் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்துசேரும். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். சித்திரை மாதத்தில் பதட்டப்படாமல் செயல்படுங்கள். காரியத்தடைகள் வந்து நீங்கும்.

26.9.2009 முதல் ஐந்தாம் வீட்டிலிருக்கும் சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு மாறுவதால் பழைய கடன் தீரும். வழக்கு சாதகமாகும். குழந்தை பாக்யம் கிட்டும். 27.10.2009 முதல் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும், கேது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கும் வருவதால் தாயாரின் உடல்நிலை சீராகும். வாகன, வீடு பராமரிப்புச் செலவு குறையும். 15.12.2009 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு பதினோறாம் வீட்டிற்கு வருவதால் அதுமுதல் வீண்பழி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

வைகாசி, ஆனி மாதங்களில் புது முயற்சிகள் வெற்றியடையும். உங்களை குறை கூறியவர்களெல்லாம் இனி உங்களின் புகழாரம் பாடுவார்கள். திறமைகள் வெளிப்படும். கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகளின் நட்பு கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். ஆடி மாதத்தில் குடும்பத்தில் அதிருப்தி, கணவன் -மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். பிள்ளைகள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்று வருந்துவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். டென்சன், அரசு விஷயங்களில் தடுமாற்றம் வந்துபோகும்.

ஆவணி மாதத்தில் பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பீர்கள். புது மனை, சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். நீண்டகாலமாக நினைத்திருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வி. ஐ. பிகளின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புரட்டாசி மாதத்தில் புது முயற்சிகள் வெற்றியடையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். மனக்குழப்பங்களுக்குத் தீர்வு கிட்டும். ஐப்பசி மாதத்தில் தந்தை, உடன்பிறந்தவர்களுடன் கருத்துமோதல்கள் வெடிக்கும். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிரடியான மாற்றங்கள் நிகழும். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வருங்கால திட்டங்களில் ஒன்று நிறைவேறும்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். தை, மாசி மாதங்களில் சூரியன் வலுவாக இருப்பதால் புது ஒப்பந்தங்களை கையெழுத்தாகும். 15.12.2009 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு பதினோறாம் வீடான லாப வீட்டிற்கு வருவதால் அதிரடி லாபம், திடீர் யோகம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் தொந்தரவு விலகும்.

பத்தாம் வீட்டில் குரு நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து விலகும். டிசம்பர் மாதத்திலிருந்து அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.

கலைத்துறையினர்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். கல்யாணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். காதல் கைகூடும். தாயாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.

மாணவ-மாணவியர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

இந்த தமிழ் புத்தாண்டு முற்பகுதியில் தடுமாற்றங்களையும் இழப்புகளையும் தருவதாகவும் மையப்பகுதி புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் இறுதி பகுதி எதையும் சாதிக்க வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம் :
விருத்தாசலம் அருகேயுள்ள மணவாளம் நல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கொளஞ்சியப்பரை (முருகன்) பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.