வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (15:09 IST)

அம்மன்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில்

அம்மன்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில்

தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில்.


 


இது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
 
வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். 
 
பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்). அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட்டனர்.
 
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெறுகிறது. இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர். அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர்.
 
சமயபுரம் கோவிலுக்கு அம்மனை வழிபட தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் மற்ற கிழமைகளை விட கூடுதலாக உள்ளது. விழாக்காலங்களில் இது இன்னும் அதிகமாகிறது.