வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்

சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.


 


இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோயில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. 
 
கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
 
பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். 
 
அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.
 
கபாலீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. அப்பர், திருநாவுக்கரசர், சம்பந்தர் உள்ளிட்ட சிவனடியார்கள் பாடல் பெற்ற இந்த திருத்தலத்தின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். 10 நாட்களாக நடக்கும் இந்த திருவிழாவில் அதிகார நந்தி, வெள்ளிவிடை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார்.
 
பங்குனிப் பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி வருதல் முக்கியமானட்ம்தாகும். கபாலீஸ்வரர் கோயிலில் காலை மணியளவில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைக்கு பிறகு திருத்தேர் வடம்பிடித்தல் தொடங்கும். 
 
முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலர், சண்டிகேஸ்வரர் தேர்கள் கபாலீஸ்வரரை பின் தொடர்ந்து வரும். மயிலை மாட வீதியில் வலம் வந்த திருத்தேரினை காண சாலையோரங்கள் மற்றும் உயர்ந்த கட்டிடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரவதுண்டு. இதையடுத்து அன்று மதியம்ப அறுபத்துமூவர் உலா நடக்கும்.
 
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அன்னதானம், நேர்த்தி கடன் செலுத்துதல் போன்றவற்றை மேற்கொள்வர். 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்