1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (12:28 IST)

தமிழகத்தில் கனமழை - மழை மன்னன் ரமணன் பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனரும், மழை மன்னர் என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான ரமணன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட  8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 5ம் தேதி வரை கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.  
 
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன், தொலைப்பேசி வழியாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
வடகிழக்கு கிழக்கு பருவமழையின் ஆரம்பமே சிறப்பாக அமைந்துவிட்டது. இந்த வருடம் சிறப்பான மழை இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், 2015ம் ஆண்டு பெய்தது போல் இருக்குமா என இப்போது கூற முடியாது. ஆனால், கடந்த வருடத்தில் பெய்த வட கிழக்கு பருவமழையை விட குறைவாக இருக்காது. எனவே, போன வருடம் போல இந்த வருடம் வறட்சி இருக்காது. 
 
எவ்வளவு மழை பெய்யும் எனக் கூறமுடியாது. இந்த மழையை சமாளிக்க நாமும், அரசும் தயாராக இருக்க வேண்டும். பொதுவாக மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தம் உருவானால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை இருக்கும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்”என அவர் தெரிவித்தார்.