வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவையான வடகறி செய்ய...!!

தேவையான பொருள்கள்:
 
கடலைப்பருப்பு - 1/2 கப் 
மிளகாய் வத்தல் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
தனியாத்தூள் - 2 மேஜைக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தேங்காய் பால் - ஒரு கப்
 
 
தாளிக்க தேவையான பொருள்கள்:
 
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
பட்டை - 2 
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: 
 
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் மிளகாய் வத்தல், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லித்தழை மூன்றையும் நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்சியில்  அரைத்து 3/4 கப் அளவுக்கு பால் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளாக தட்டி சுட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறியதும் சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை  பொன்னிறமானதும் கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அடுப்பை சிம்மில் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி அதனுடன் உப்பும், ஒரு கப்  தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிடவும். 
 
மசாலா வாடை போனதும் தேங்காய் பால் சேர்க்கவும். பிறகு அதனுடன் வடை துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வரை அடுப்பை சிம்மில்  வைக்கவும். இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான வடகறி தயார். இவை இட்லிக்கு, தோசைக்கு  தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.