1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (15:26 IST)

“சினிமாத்துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது” - விஷால்

‘சினிமாத்துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது’ என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான விஷால், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காலா பட பிரச்சனையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு.  இரண்டையும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கி இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.
 
பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம்தான் சினிமா. அப்படி இயங்கிவரும் சினிமாத்துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது. ஒரு திரைப்படம் வெளியாவதில் அரசியல் புகக்கூடாது. இந்த தீர்ப்பு அனைத்து திரைத்துறையினரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதன் மூலம் இரு மாநில மக்களுமே மகிழ்ச்சி அடைவார்கள். கர்நாடகாவில் முதல்வராகப் பதவியேற்றுள்ள குமாரசாமி அவர்களுக்கு வணக்கத்துடன், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். காலா திரைப்படத்திற்கு தொடர்ந்துவரும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என்று எங்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது. கர்நாடக அரசு  காலா திரைப்படம் வெளியாவதை உறுதி செய்வதோடு, படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கும், காணவரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்று  நம்புகிறோம்.
இதனை ஒரு கோரிக்கையாகவே கர்நாடக அரசிடம் வைக்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் தாங்கள் எடுக்கும் சுமூகமான முடிவினால், இரு மாநிலப்  பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். இரு மாநிலத்தின் நட்புக்கும் இது எதிர்காலப் பயனை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.