வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (09:11 IST)

விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து தனுஷ் –விஷாலுக்குக் குடைச்சல் கொடுக்கும் நடிகர்கள்!

தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியின்றி தனது படத்தை ரிலீஸ் செய்த விஜய் ஆண்டனியைப் போல தனுஷும் தனது படமான மாரி 2 வை ரிலிஸ் செய்யவுள்ளதால் சிறு தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் அதிருப்தியடைந்துள்ளது.

தமிழ் சினிமாவை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவதற்காக விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பட வெளியீட்டினை ஒழுங்குபடுத்துவதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அமைக்கப்பட்ட கமிட்டியும் ஒன்று. அந்த கமிட்டியின் வேலை சென்சார் முடிந்து ரிலிஸுக்குக் காத்திருக்கும் படங்களை முறையாக வரிசைப் படுத்தி வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது. இந்த கமிட்டியின் ஒப்புதல் இன்றி எந்த படங்களும் ரிலிஸாகக் கூடாது எனக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இந்த கமிட்டியின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக தங்கள் படங்களை ரிலிஸ் செய்து வருகின்றனர். விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சர்கார் திரைப்படம் தீபாவளியின் போது அனைத்து திரையரங்குகளையும் அபகரித்துக் கொண்டதால் தனது வெளியீட்டை இரண்டு வாரங்கள் தள்ளி நவம்பர் 16 ஆம் தேதி ரிலிஸ் செய்து கொண்டனர். இதனால் நவம்பர் 16 ஆம் தேதி ரிலிஸாக இருந்த சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை உருவானது. இதனால் அதிருப்தியடைந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

தற்போது மீண்டும் அதேப் போன்ற ஒரு சிக்கல் உருவாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் ரிலிஸுக்கு திட்டம் வகுத்திருந்த தனுஷின் மாரி 2 திரைப்படம் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையான டிசம்பர் 21 ஆம் தேதி தனது படத்தை ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜனவரியில் ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாவதால் தியேட்டர் கிடைக்காது என்ற காரணத்தால் இந்த திடீர் முடிவு எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த முடிவால் ஜெயம் ரவியின் அடங்கமறு, விஜய் சேதுபதியின் சீதக்காதி மற்றும் சிவகார்த்திக்கேயன் தயாரித்துள்ள கனா திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் கடுப்பான தயாரிப்பாளர்கள் இதுபற்றி விஷாலிடம் முறையிட்டுள்ளதாகவும் அது சம்மந்த கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில்  இந்த பிரச்சனைக்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.