நாம் செய்ய நினைத்ததை சில நேரங்களில் செய்யாமல் தடுக்கும் சுய கட்டுப்பாட்டை செலுத்தக் கூடிய பகுதி மூளையில் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது உடலின் பல்வேறு செயல்களை தன்னிச்சையாகவோ அல்லது இச்சைப்படியோ செய்யக் கூடிய மூளையின் பல்வேறு பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், செயலை செய்விப்பதற்காக கட்டளையிடும் பகுதிக்கு அப்பாற்பட்டதாக சில செயலை செய்யாமல் தடுக்கும் பொறுப்பான பகுதி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலையின் ஆய்வாளர் முனைவர் மார்த்தா ஃபாரா கூறியுள்ளார்.
மூளையின் இப்பகுதியின் செயல்பாட்டை ஆராய்ந்த மார்த்தா, "நமது நடத்தையை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு முக்கியத் தன்மை தெரிய வந்துள்ளது. நீங்கள் செய்ய நினைத்து நன்கு ஆலோசித்து முடிவு செய்துவிட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் கட்டுப்பாட்டை மூளையின் இப்பகுதி கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
"நாம் நினைத்ததை செய்யும் மன முடிவிற்கு எதிரான சுதந்திரமாகச் செய்யாதே என்று கூறும் பகுதி இது" என்கிறார் முனைவர் மார்த்தா ஃபாரா.
"பல்வேறுபட்ட பிறழ்ச்சி கோளாறுகளுக்கு காரணமாவது இந்த சுய கட்டுப்பாட்டு விஷயம்தான். எனவே இதன் இயக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியமானதாகும். பல்வேறு பட்ட மனக்கோளாறுகளுக்கு தீர்வு காண மூளையின் இந்த இயக்கத்தின் செயல்பாட்டை அறிவது மிக அவசியமாகிறது" என்று ஃபாரா கூறியுள்ளார்.
மனிதன் முடிவெடுத்து செயல்படுவது மூளையில் உள்ள இந்த நடுநிலை தன்மை தொடர்பான புரிந்துணர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய ஆய்வாளர் முனைவர் மார்சல் பிராஸ் (கென்ட் பல்கலை), சில மனிதர்கள் முடிவுகளை அடிக்கடி மாற்றுபவர்களாக இருப்பதற்கும், சிலர் முடிவே எடுக்காமல் செயல்படாமல் இருப்பதற்கும் ஆன காரணங்களை அறிய மூளையின் இந்த செயல்பாடு மிக அவசியம் என்று கூறினார்.
(ஏ.என்.ஐ.)
|