வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (20:33 IST)

ஜிமெயில் மின்னஞ்சல்களை படிக்கும் ரகசிய கண்கள் யாருடையது?

ஜிமெயிலில் இருந்து அனுப்பப்படும் தனிப்பட்ட மின்னஞ்சல்களை இயந்திரங்கள் மட்டுமல்ல அனுப்புநர், பெறுநருக்கு தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு செயலிகளை உருவாக்கியவர்களும் சில சமயங்களில் படிக்கக்கூடும் என்பதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
மூன்றாம் தரப்பு செயலிகளை ஜிமெயில் கணக்கில் இணைப்பதன் மூலம், தங்களை அறியாமலே தங்கள் மின்னஞ்சல்களை யாரோ ஒருவர் படிக்க அனுமதிக்கின்றனர்.
 
"இது ஒன்றும் புதிதல்ல. சர்வசாதாரணமாக நடக்க கூடிய ஒரு ரகசிய செயல்தான்" என வால்ஸ்ட்ரீட் ஜர்னலிடம் ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், "இது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானதல்ல" என கூறுகிறது கூகுள்.
 
கூகுள் போன்ற ஒரு நிறுவனம் இத்தகைய தவறுகளை அனுமதிப்பது ஆச்சரியம் தருவதாக இருப்பதாகக் கூறுகிறார் ஒரு பாதுகாப்பு நிபுணர். 140 கோடி பயனர்களுடன் உலகின் பிரபலமான மின்னஞ்சல் சேவை நிறுவனமாக திகழ்கிறது கூகுள்.
 
தங்கள் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துவோரின் கணக்கை பயண மேலாண்மை நிறுவனம், விலை ஒப்பீட்டு வசதி சேவை நிறுவனம் போன்ற ஏதாவதொரு மூன்றாம் தரப்பு நபர்கள் அணுக கூகிள் அனுமதிக்கிறது.
 
கூகுள் கணக்கில் ஆப்களை நிறுவ முற்படும்போது அக்கணக்கை பயன்படுத்திக்கொள்ள பல்வேறு ஒப்புதல்கள் கேட்கப்படுகின்றன. ஜிமெயில் மின்னஞ்சல் தகவல்களை படிப்பதற்கும் கூட அனுமதி கேட்கப்படுகிறது.
 
சில சமயங்களில மூன்றாம் தரப்பு ஆப் நிறுவனங்களின் பணியாளர்கள் கூட பலரின் தனிப்பட்ட ஜிமெயில் மின்னஞ்சல் தகவல்களை படிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.
 
பொதுவாக மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்களை கம்ப்யூட்டர் அல்காரிதம்கள்தான் கையாள்கின்றன. இந்தச் சூழலில் பயனர்களின் மின்னஞ்சல் தகவல்களை மூன்றாம் தரப்பு நபர்கள் படித்ததாக கூறப்பட்ட சில நிறுவனங்களை அணுகியது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.
 
புதிய மென்பொருள் கட்டமைப்பை உருவாக்க நூற்றுக்கணக்கானோரின் மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததாக கூறியது எடிசன் சாஃப்ட்வேர் நிறுவனம். அல்காரிதம்களை மேம்படுத்துவதற்காக பிறரின் மின்னஞ்சல் தகவல்களை படித்ததாக கூறியது இடேட்டா சோர்ஸ் இன்க் என்ற மற்றொரு நிறுவனம்.
 
மின்னஞ்சல்களை படிப்பதற்காக பயனர்களின் ஒப்புதலை குறிப்பாக கேட்பதில்லை என்றும் ஆப்பை நிறுவும் முன்பே ஒப்பந்தம் என்ற பெயரில் பயனர்களின் ஒப்புதல் பெறப்பட்டுவிடுவதாகவும் கூறுகின்றன செயலி உருவாக்கும் (ஆப் டெவலப்மென்ட்) நிறுவனங்கள்.
 
ஆனால், இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிப்பதற்கே வாரக்கணக்கில் ஆகும் என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலன் உட்வர்டு.
எல்லாமே அந்த ஒப்பந்தத்தில் இருக்கும். ஆனால் எந்தளவுக்கு உங்கள் தகவல்களை செயலி உருவாக்குவோர் பயன்படுத்தமுடியும் என்பதை அந்த ஒப்பந்தத்திலிருந்து தெரிந்துகொள்ள முடியாது என்கிறார் உட்வர்டு.
 
தகவல்கள் மிகவும் அவசியம் தேவைப்படும் நிறுவனங்கள் மட்டுமே பயனர்களின் மின்னஞ்சல்களை படிக்க அனுமதிக்கப்படுவதாக கூறுகிறது கூகிள். அதே சமயம் பயனர்கள் தங்கள் தெளிவான ஒப்புதலை அளித்தபிறகே அவர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பு ஆப் டெவலப்பர்கள் படிக்க அனுமதிப்பதாகவும் அது கூறுகிறது.
 
மறைமுகமான நோக்கங்கள், சேவைகள், சந்தை நோக்கத்துடன் பொருந்தாத செயல்கள் போன்றவற்றுக்காக பயனர்களின் தகவல்களை பயன்படுத்திக்கொண்டால் அந்த ஆப் கூகிளின் வசதிகளை பயன்படுத்துக்கொள்வது நிறுத்தி வைக்கப்படும் என கூகிள் கூறுகிறது.
 
கூகிளை பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாதுகாப்பு பரிசோதனை பக்கத்துக்கு சென்று எந்தெந்த ஆப்புகளுடன் தங்கள் மின்னஞ்சல் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறது கூகிள். எந்த ஆப்களுடன் தங்கள் தகவல்களை பகிர விருப்பமில்லையோ அதை உடனடியாக நீக்கிவிடலாம் என்கிறது கூகுள்.