வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

காளான் பிரியாணியை சமைத்து சுவைத்திட வேண்டுமா...!

தேவையான பொருட்கள்:
 
காளான் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப் 
புதினா - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப் 
தயிர் - சிறிதளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க:
 
பிரியாணி இலை, ஏலக்காய், லவங்கம், கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப.

 
செய்முறை:
 
முதலில் காளானை கழுவி சிறியதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், அரிசியை நீரில் ஊற  வைக்கவேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய்,  லவங்கம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும். பின் இஞ்சி, பூண்டு  விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். 
 
தக்காளி நன்கு வதங்கியதும், காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயம் குக்கரை மற்றொரு அடுப்பில்  வைத்து அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் வைத்து  10 நிமிடங்கள் அப்படியே சிறிய தீயில் வைத்து இறக்கவும். சிவையான காளான் பிரியாணி தயார்.