வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (08:14 IST)

5 மாநிலங்களில் தோல்வி: மோடிக்கு பதில் வேறு தலைவர்?

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவிலும் மோடி அலை வீசியதால் பாஜக, கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமலேயே தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. அத்வானி போன்ற மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளி மோடி பிரதமராக பதவியேற்றதும் அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

அதேபோல் மோடியின் முதல் வருட ஆட்சி சூப்பராக இருந்ததாகவே கருத்து நிலவுகிறது. ஆனால் 2016ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு, அதன்பின்னர் ஜிஎஸ்டி, வங்கிகளின் வாராக்கடன், பெரிய தொழிலதிபர்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி, ரபேல் ஊழல் ஆகியவை மோடியின் இமேஜை சுக்கு நூறாக்கியது. அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசலின் கடுமையான விலையுயர்வு, சமையல் எரிவாயுவின் விலை சுமார் ரூ.1000 என்பது நடுத்தர மக்களுக்கு வேட்டு வைத்தது. இதனால் மோடி என்றாலே வெறுப்பு ஏற்படும் நிலை தான் மக்கள் மனதில் ஏற்பட்டது.

இந்த ஐந்து மாநில தோல்வி கூட பாஜகவுக்கு கிடைத்த தோல்வியாக கருதமுடியாது. இந்த தோல்விக்கு முழுக்க முழுக்க மோடியே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இப்பொழுதுகூட ஒன்றும் மோசம் போகவில்லை. வரும், பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு பதிலாக வேறொரு தலைவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில் அதற்குள் பாஜக தலைமையில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்