1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (07:57 IST)

விடிய விடிய வாக்கு எண்ணிக்கை – மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் நிலை

நேற்று நடைபெற்ற 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸூம் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் நீயா நானாப் போட்டி நடைபெற்றது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. அந்த 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இன்னும் ஆறு மாதத்தில் பாராளுமண்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்தல் முடிவுகளை நாடே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதலே பாஜக 5 மாநிலங்களிலும் பின் தங்கியே இருந்து வந்தது. ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தது காங்கிரஸ். தெலங்கானாவில் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியைத் தக்க வைத்தது. மிசோரம்மில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. மத்தியப் பிரதேசத்தில் நண்பகலுக்குப் பிறகு காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நடைபெற்றது. இரண்டு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.

மத்தியப் பிரதேசத்தில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் யாருக்கு வெற்றி என்பதை அறிய முடியாமல் இழுபறி சூழ்நிலை உருவானது. நள்ளிரவு வரைக்கும் இந்த இழுபறி நீடித்தது. நள்ளிரவு 12 மணிக்கு பாஜக வெற்றி பெற்றது 82 இடங்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றது 81 இடங்கள் என இருந்தது. முன்னணியுடன் சேர்த்து பாஜக 110, காங்கிரஸ் 113 என இருந்தது.

இன்று காலை காங்கிரஸ் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் பாஜக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 தொகுதிகளில் மற்ற கட்சிகளும் சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் 9 தொகுதிகளில் முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்த முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் காங்கிரஸின் வெற்றி பெரும்பாண்மையா அல்லது கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா என்ற விவரம் தெரிய வரும். காங்கிரஸ் பெரும்பாண்மை வெற்றிப் பெற இன்னும் 4 தொகுதிகள் தேவை