1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (13:22 IST)

“என்னவளே.. உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது”.. ஜோதிகாவின் புதிய படத்தைப் பார்த்து சூர்யா பாராட்டு!

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.இப்போது மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லர் படமான ஷைத்தான் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தைப் பார்த்து சூர்யா தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஜோதிகாவைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதில் “என்னவளே, என் துணையே, என் பலமே! ஷைத்தான் படம் மூலம் புதிய தொடக்கத்தை ஆரம்பித்துள்ளாய். உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. மரியாதையும் அன்பும்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.