வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (08:54 IST)

ரமேஷ் பவாரின் அதிரடி முடிவு – என்ன செய்யப்போகிறது பிசிசி ?

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மற்றும் இந்தியாவின் நட்சத்திர வீரங்கனை மிதாலி ராஜ் ஆகியோருக்கு இடையில் பிரச்சனை உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடரில் நல்ல ஆட்டத்திறனில் இருந்த மிதாலி ராஜை திடிரென அணியில் இருந்து ஓரங்கட்டினர் கேப்டனும் பயிற்சியாளரும். இதனால் இந்திய அணி அரையிறுதியில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து மிதாலி ராஜ் கேப்டன், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது புகார் கூறினார். இதனையடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து ரமேஷ் பவார் பிசிசிஐயால் நீக்கப்பட்டார்.

ஆனால் பயிற்சியாளர் பவாருக்கு ஆதரவாக கேப்டன் ஹர்மன் மற்றும்  துணைக் கேப்டன் மந்தனா ஆகியோர் செயல்பட்டனர். மேலும் மீண்டும் பவாரே பயிற்சியாளராக நியமிக்கப் படவேண்டுமென பிசிசிஐக்குக் கடிதமும் எழுதினர். அக்கடிதத்தில் ‘ரமேஷ் பவார் வெறும் பயிற்சியாளராக மட்டுமல்லாமல் எங்களைப் பல விதங்களில் ஊக்குவித்துள்ளார். உலகக்கோப்பை டி 20 போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வருடமே உள்ளதால் அவரே தொடர்ந்து பயிற்சியாளராக தொடர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்’ எனக் குறிப்பிடிருந்தனர்.

ஆனால் இது குறித்து பிசிசிஐ எந்த முடிவும் அறிவிக்காமல் இருந்தது. இப்போது இரண்டு வாரக் காலத்திற்குப் பின்பு காலியாக உள்ள பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் ரமேஷ் பவார் விண்ணப்பித்துள்ளார். அணியில் அவருக்கு இருக்கும் ஆதரவை வைத்து அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா ? அல்லது அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுமா? என்ற விவரம் கூடிய விரைவில் தெரிய வரும்.