1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (15:57 IST)

கோஹ்லியின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு..- அடிலெய்டு டெஸ்ட்டின் 5 நாள் அலசல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டில் நடைபெற்ற  முதல் டெஸ்ட்டில் இந்திய அணி  31 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தது இங்கிலாந்தாக இருந்தாலும் கிரிக்கெட்டின் எல்லாக் காலங்களிலும் எல்லா வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்திய அணி ஆஸ்திரேலியா என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வெல்வது என்பது குதிரைக் கொம்புதான். அப்படியான ஆஸ்திரேலிய அணியை அவர்கள் மண்ணிலேயே வெல்வது என்றால் எப்படி இருக்கும் ? அத்தகைய சாதனையைத்தான் கோலி தலைமையின் கீழ் சாதித்துள்ளது இந்திய அணி.

இந்தியா அஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான விஜய், ராகுல், கோஹ்லி, ரஹானே அகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்ட. ரோஹித், பண்ட், அஸ்வின் ஆகியோரின் துணையோடு இந்தியாவைக் கரைசேர்த்தார் புஜாரா. அவரின்  சதத்தால். 250 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தின் முதல் நாளான இன்று ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது.

அதையடுத்து 2 ஆம் நாள் முழுவதும் விளையாடிய ஆஸ்திரேலியா இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொந்த மண்ணில் தினறினர். இந்த 2 ஆம் நாளில் இருந்தே இந்தியாவின் கை ஓங்க ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவின் ஹெட் தவிர மற்ற்வர்கள் இந்திய பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேற ஆஸ்திரேலிய 235 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்தியா சார்பில் அஸ்வின், பூம்ரா, ஷமி, இஷாந்த் ஆகிய நால்வருமே சிறப்பாக பந்து வீசினர்.

15 ரன்கள் முன்னிலையில் தனது 2 வது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடியது, இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 18 ரன்களோடும் லோகேஷ் ராகுல் 44 ரன்களோடும் நடையைக் கட்ட அடுத்து வந்த புஜாராவும் கோஹ்லியும் பொறுப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நிதானமாக விளையாடிய கோஹ்லி 34 ரன்கள் நாதன் லியன் பந்தில் 3 ஆம் நாள் ஆட்டமுடிவில் ஆட்டமிழந்தார்.அதையடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரஹானே வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைக்க உதவினார். சிறப்பாக விளையாடிய புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ரோஹித் 1 ரன்னிலும் பண்ட் 25 ரன்னிலும் வெலியேற, அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காம் நாளின் முதல் செஷனில் இந்தியாவின் மோசமான பேட்டிங்கால் மேட்ச் ஆஸ்திரேலியா கைவசம் சென்றது. இந்தியாவின் நடு மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருந்தால் கூடுதலாக 50 முதல் 100 ரன்கள் சேர்த்து பயமின்றி விளையாடி இருக்கலாம்.

இதையடுத்து 323 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாடும் முனைப்புடன் களத்தில் செயல்பட்டனர். இதனால் ஆஸ்திர்ரெலியாவின் ரன்ரேட் மிகவும் மந்தமாக சென்றது. இதற்கிடையில் சீரான இடைவெளியில் விக்கெட்களை எடுத்தனர் இந்திய பவுலர்கள். நான்காம் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்திருந்தது. ஷான் மார்ஷ் மட்டும் நிலைத்து நின்று தாக்குப்பிடித்தார். அவருக்கு டிம் பெய்ன்ஸ் ஓரளவு நிலைத்து நின்று ஒத்துழைத்தார்.

ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஷான் மார்ஷ் 60 ரன்களிலும் பெய்ன் 41 ரன்னிலும் பூம்ரா பந்தில் அவுட் ஆகி வெளியேறின்ர். அதனால் வெற்றி நிச்சயம் என்ற உறுதியுடன் பந்துவீசிய பவுலர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் தலைவலியை உண்டாக்கினர். கம்மின்ஸ்(28), ஸ்டார்க்(26), லியன்(38*) ஆகியோர் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று இந்தியாவின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கினர்.

இவர்களின் விக்கெட்டைக் கைப்பற்றக் கேப்டன் கோஹ்லி அனைத்து பந்து வீச்சாளர்களையும் சுழற்சி முறையில் உபயோகித்துப் பார்த்தார். இடைப்பட்ட நேரத்தில் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரின் விக்கெட் விழ ஆதிரேலியாவின் வெற்றிக்குத் தேவைப்படும் ஸ்கோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் இருபது ஓவர் போட்டிகளில் ஏற்படும் கடைசி நிமிடப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது வெற்றிக்கு இன்னும் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் அஸ்வின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் ஹாசில்வுட். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட்டை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்த வெற்றிக்குக் காரணமாக புஜாராவின் சிறப்பான பேட்டிங், அஸ்வின், பூம்ரா ஆகியோரின் நேர்த்தியான பவுலிங், 5 நாள் போட்டியில் மூன்றரை நாளுக்கு மேல் போட்டியைத் தங்கள்து கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய அணியினரின் குழு நடவடிக்கை ஆகியவற்றை சிறப்பாக சொல்லலாம். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி அதன் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லாமல் தத்தளித்து வருவதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எது எப்படியோ வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 6 வது வெற்றியை சுவைத்துள்ளது கோஹ்லி & கோ. ஆட்டநாயகன் புஜாராவிற்கும் இந்திய அணிக்கும் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து மழைப் பொழிந்து வருகின்றனர்.