வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போடுவதற்கான காரணம் என்ன...?

கஜமுகன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, அதன் வாயிலாக அவரிடம் இருந்து சக்திகளை பெற்றிருந்தான். பெற்ற வரத்தால், தேவர்களை கொடுமைப்படுத்தினான்.
தேவர்களுக்கு பல கொடுமைகளை செய்து வந்தான். அவர்களை சிறுவர்களை போல பாவித்து தண்டனை வழங்கினான். தேவர்கள் அனைவரையும் தனக்கு முன்னால் வரச்செய்து, காதுகளை கரங்களால் பற்றிக்கொண்டு ஆயிரத்து எட்டு தோப்புக்கரணம் போடச் சொன்னான்.  அதோடு இருகரங்களையும் நெற்றியில் குட்டிக்கொள்ள வேண்டும் என்றும், தேவர்களுக்கு அசுரன் ஆணையிட்டான். 
 
தங்களின் துன்பத்தை போக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான், கஜமுகனை அழிப்பதற்காக தன் மகனான விநாயகரை அனுப்பினார். கஜமுகனுக்கும், விநாயகக்கும் நடந்த போரில் கஜமுகன் படை அழிந்தது, ஆனால் அவனை அழிக்க முடியவில்லை.
 
காரணம் என்னவென்றால் எந்த ஆயுதத்தாலும் அழியாத வரத்தை அவன் பெற்றிருந்தான். அதனை உணர்ந்த விநாயகர் தன்னுடைய  கொம்புகளில் ஒன்றை ஒடித்து, சிவ மந்திரத்தை உச்சரித்து ஏவினார். இதில் கஜமுகனின் அசுர உருவம் அழிந்து பெரிய எலியின் உருவம்  கொண்டான். விநாயகரின் அருள்பார்வையால் அந்த எலியை தனது வாகனமாக மாற்றிக்கொண்டார்.
 
இதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள், அசுரனிடம் தாங்கள் தண்டனையாக செய்த தோப்புக்கரணத்தையும், நெற்றியில் குட்டிடும் செய்கையையும், நன்றியுடன் விநாயகப்பெருமானுக்கு செய்தனர். இதனால் விநாயகரின் முன்பாக நின்று நெற்றியில் குட்டி தோப்புக்கரணம்  போட்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.