1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 11 மே 2019 (08:56 IST)

இரத்த அழுத்தத்தில் வைரமுத்து; வீதிகளில் போராட்டம்: தமிழக அரசுக்கு எச்சரிக்கை!

கவிஞர் வைரமுத்து அக்கினி நட்சத்திர வீதிகளில் ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு பாடவும் தயங்க மாட்டோம் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
11, 12 ஆம் வகுப்பு மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை மாணவா்கள் தோ்வு செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதனை கண்டித்துதான் தமிழக அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
வைரமுத்து குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன். 
 
தமிழ் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம். பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். 
இந்தச் செய்தி கேட்டதில் இருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் கால தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. 
 
தமிழக அரசு இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
ஆனால், தமிழ் அல்லது ஆங்கிலம் என ஒரு மொழிப் பாடத்தை மாணவா்கள் தோ்வு செய்து படிக்கலாம் என வெளியான் தகவ்ல் முற்றிலும் பொய்யானது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் விளக்கமளித்து குழப்பத்தை போக்கியுள்ளார்.