வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (08:04 IST)

நீட் தேர்வு எளிமையாக இருக்க அமைச்சர் செங்கோட்டையன் காரணமா?

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று மாணவர்களும், பெற்றோர்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கூறி வந்தன. அதற்கு ஒரே காரணம் நீட் தேர்வுக்கான கேள்விகள் கடினமாக இருப்பதாகவும், அரசுப்பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள், சிபிஎஸ்இ மாணவர்களுடன் போட்டி போட முடியாததால் அவர்களுடைய வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நீட் தேர்வின் கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதற்கு முக்கிய காரணம் அமைச்சர் செங்கோட்டையன் தான் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்ட நிலையில் புதிய பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
 
அதாவது நீட் தேர்வில் கேட்கப்பட்ட 45 இயற்பியல் கேள்விகளில் 11, 12ஆம் வகுப்பின் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 23 கேள்விகள் வந்திருந்ததாகவும், அதேபோல் 45 வேதியியல் கேள்விகளில் 21 கேள்விகளும், 90 உயிரியல் கேள்விகளில் 80% கேள்விகளும் புதிய பாடத்திட்டத்தில் இருந்துதான் வந்துள்ளதால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த முறை நீட் தேர்வு மிக எளிதாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
நீட் தேர்வுகளின் கேள்விகளை ஆய்வு செய்து அதற்கேற்ற வகையில் புதிய பாடத்திட்டங்களை மாற்றிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு மாணவர்களின் நன்றிகள் குவிந்து வருகிறது