வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (11:34 IST)

ஜனாதிபதி சந்திப்பு..அதன் பின் நீதிமன்றம் - தினகரனின் அதிரடி திட்டம்

தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை ஜனாதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டுள்ளார்.


 

 
அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டு, கட்சி மற்றும் ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, சில மாதங்களுக்கு முன்பு தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. 
 
அதோடு, கட்சியின் அனைத்து முக்கிய அதிகாரங்களும், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு வழங்கி ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. அதேபோல், இனிமேல் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டு விட்டது.
 
இதனால் கொதித்தெழுந்த டிடிவி தினகரன் ‘இந்த ஆட்சியை அகற்றுவோம்’ எனப் பேச துவங்கியுள்ளார். அதே நேரம், ‘முடிந்தால் அவர் அதை செய்து பார்க்கட்டும்’ என எடப்பாடியும் மார்பு தட்டுகிறார். மொத்தத்தில், அதிமுக என்கிற கட்சி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு.
 
இதனை கண்டு பொங்கியெழுந்த தினகரன், இனிமேல் இந்த ஆட்சி இருந்தால் என்ன? போனால் என்ன? என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்.  தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுப்பது போல் தெரியவில்லை. எனவே, கர்நாடகாவில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக்கொண்டு டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார் தினகரன். ஜனாதிபதி மாளிகையில் அதற்கான நேரமும் கேட்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதியை சந்தித்து, எடப்பாடி பெரும்பான்மை இழந்துவிட்டதாக கூறி, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என தினகரன் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. அதன் பின்பும், எந்த நடவடிக்கையும் இல்லை எனில், அவர் நீதிமன்றத்தை நாடுவார் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
 
தினகரன் - எடப்பாடி பழனிச்சமி மோதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.