வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2017 (11:54 IST)

இனி ஆட்சி இருந்தால் என்ன? கவிழ்ந்தால் என்ன? - களம் இறங்கும் தினகரன்

கட்சியிலிருந்து சசிகலாவையும், தன்னையும் நிரந்தரமாக தள்ளி வைக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இறங்கி விட்டதால், இனிமேல் ஆட்சியை பற்றி கவலையில்லை என தினகரன் தரப்பு கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சில மாதங்களுக்கு முன்பு, கட்சி விவகாரங்களிலிருந்து தினகரன் தள்ளி இருக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு முடிவெடுத்த போது, இரு அணிகள் ஒன்றாய் இணைவதற்கு நான் தடை என்றால் விலகிக் கொள்கிறேன் என பவ்யம் காட்டினார் தினகரன். அதேபோல், இரட்டை இலை விவகாரத்தில் சிறைகு சென்று விட்டு திரும்பியதும், சசிகலா என்னை இன்னும் இரண்டு மாதம் அமைதி காக்க சொன்னார் என பேட்டியளித்தார்.
 
அதேபோல், இரண்டு மாதம் கழித்து, இரு அணிகளும் இணைவது போல் தெரியவில்லை. எனவே, நான் கட்சிப்பணிகளில் ஈடுபடுவேன் என அறிவித்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி தரப்பு, கட்சி தலைமை அலுவலகத்திற்கு அவரை வர விடாமல் பார்த்துக்கொண்டது. மேலும், கட்சியிலிருந்து அவரை நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், தொடர்ந்து எடப்பாடி பக்கம் இருந்த அதிமுக நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கம் செய்து வந்தார் தினகரன்.
 
அதோடு, தனது பக்கம் 19 எம்.எல்.ஏக்களை இழுத்து, அவர்களை ஆளும் எடப்பாடி அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வைத்தார். தற்போது அவர்களை கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார்.

மேலும், ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் எனவே விரும்புகிறோம். முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை அகற்றி விட்டு புதிய முதல்வரை நியமிப்பதே எங்கள் நோக்கம் என தொடர்ந்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறிவந்தார்.
 
இந்நிலையில்தான் நேற்று கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதோடு, பொதுச்செயலாளருக்குள்ள அதிகாரங்கள் அனைத்தும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


 

 
முக்கியமாக, தினகரன் பற்றி எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதாவது, அவர் கட்சியிலேயே இல்லை. எனவே, அவரை மீண்டும் ஏன் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என நினைத்த எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு அவரை கண்டு கொள்ளவே இல்லை. சசிகலாவின் நியமனமே செல்லாது எனில், அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனங்கள் அனைத்தும் செல்லாது என்று மட்டும் அறிவித்து விட்டனர்.
 
இதனால் கோபமடைந்த தினகரன் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து, இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என சூளுரைத்தார். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என கெடுவும் விதித்தார்.

அதோடு, சென்னை திரும்பிய அவர், வெற்றிவேல் எம்.எல்.ஏ உட்பட சில ஆதரவாளர்களுடன் நேற்று இரவு தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய வெற்றிவேல் “நம்மை ஓரங்கட்டுவதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். நமது அனைத்து முயற்சிகளையும் அவர்கள் முறியடித்து விட்டனர். நீங்கதான் ஆட்சி வேண்டும் எனக் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்துள்ளனர் பாருங்கள். இனிமேல் எடப்பாடி ஆட்சி இருந்தால் என்ன..? போனால் என்ன..? இனிமேல் அமைதியாக இருக்கக்கூடாது என பேசினாராம்.
 
அதன் பின் பேசிய தினகரன் “அம்மாவின் ஆட்சி கலையக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தேன். எப்போது அவர்கள் இந்த அளவுக்கு சென்று விட்டார்களோ. இனிமேல் நாம் யாரென அவர்களுக்கு காட்டுவோம்.. நம் தயவின்றி அவர்கள் எப்படி ஆட்சியை நடத்துகிறார்கள் எனப் பார்ப்போம். இதற்காக நாம் யாருடனும் கை கோர்கலாம்” எனக் கோபமாக கூறினாராம்.
 
அதோடு, விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை விரைவில் தினகரன் சந்தித்து பேச முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. எனவே, அடுத்தடுத்த அதிரடிகளில் தினகரன் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.