வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (15:50 IST)

டூப்ளிகேட் இ-பாஸ் வைத்து லாபம் பார்த்த டூரிஸ்ட் வாகன நிறுவனங்கள்! – மோசடி அம்பலம்!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணிக்க டிராவல்ஸ் நிறுவனங்கள் சில போலி இ-பாஸ் பெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து விதிமுறைகளில் அரசு பல கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. முன்னதாக மண்டலத்திற்குள்ளாக அனுமதிக்கப்பட்ட போக்குவரத்துகள் தற்போது நிறுத்தப்பட்டு மாவட்டத்திற்குள்ளாக போக்குவரத்திற்கு இ-பாஸ் இல்லாத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்க இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் இ-பாஸ் தளத்தில் திருமணம், இறப்பு அல்லது மருத்துவம் ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில் பல டிராவலஸ் நிறுவனங்கள் மேற்கண்ட காரணங்களை போலியாக கூறி இ-பாஸ் பெற்று பயணிகளை அழைத்து சென்றதாகவும், அதற்காக பயணிகளிடம அதிக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சில கால் டாக்ஸி நிறுவனங்கள் வெளிப்படையாகவே விளம்பரமும் செய்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மேலும் சில டிராவல்ஸ் நிறுவனங்கள் இடைத்தரகர்களுக்கு கையூடு கொடுத்து போலியான இ-பாஸ் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு இவ்வாறாக போலி இ-பாஸ்களை தயாரித்து விற்ற கும்பலை போலீசார் கைது செய்திருந்தனர். அப்போது ஒடு இ-பாஸ்க்கு ரூ.2000 வரை அவர்கள் பணம் பெற்றதாக தெரிய வந்தது. தற்போது ஒரு போலி இ-பாஸ் பெற ரூ.2000 முதல் ரூ.4500 வரை பலர் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே டிராவல்ஸ் நிறுவனங்கள் இ-பாஸ் பெறுவதில் கட்டுப்பாடு தேவை என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.