வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (16:17 IST)

சசிகலா சிறைக்கு சென்றது ஜெ.வுக்காகவே: டிடிவி தினகரன் பேட்டி!

சசிகலா சிறைக்கு சென்றது ஜெ.வுக்காகவே: டிடிவி தினகரன் பேட்டி!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா நேற்று தனது கணவர் நடராஜனை பார்க்க 5 நாட்கள் பரோலில் வந்தார்.


 
 
சசிகலா பரோலில் விடுவிக்கப்பட்டாலும், சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டே பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, சென்னையை விட்டு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும், போயஸ் இல்லத்தில் தங்கக் கூடாது, அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடாது, ஊடகங்களை சந்தித்து பேட்டியளிக்க கூடாது போன்றவை அவருக்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனைகள்.
 
இந்நிலையில் சசிகலாவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி எடப்பாடி பழனிச்சாமி அரசுதான் இந்த நிபந்தனைகளை பரிந்துரைத்ததாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும் ஜெயலலிதாவுக்காகச் சிறை சென்ற சசிகலாவை தேசத்துரோகி போல எடப்பாடி பழனிசாமி சித்தரிப்பதாக டிடிவி குறிப்பிட்டார். சசிகலா போயஸ் கார்டனில் தங்குவதாக திட்டம் இல்லை என்றும் இந்த பரோல் கால தாமதம் ஆனதற்கு பழனிசாமி அரசு தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
 
டிடிவி தினகரன் தனது பேட்டியில் ஜெயலலிதாவுக்காக சிறை சென்ற சசிகலா என கூறியுள்ளது ஜெயலலிதா விசுவாசிகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் ஜெயலலிதா குற்றம் செய்தார், அவரது குற்றத்துக்காக எந்த தவறும் செய்யாத சசிகலா சிறையில் உள்ளார் என மறைமுகமாக கூறியுள்ளார் தினகரன்.