1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (17:33 IST)

விஷாலின் அனைத்து முயற்சிகளும் பனால் ; கை விரித்த ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சரியே என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


 
விஷாலின் வேட்புமனு நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
அந்நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து தனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை மனுவை கொடுத்தார்.
 
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், 'தேர்தல் அதிகாரி என்னுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருப்பதாகவும், அந்த கேமிராவில் உள்ள காட்சிகளை பார்த்து தலைமை தேர்தல் அதிகாரி முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். எனவே விஷாலின் வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்படுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராஜேஷ் லக்கானி “ விஷாலின் மனு முதலில் ஏற்கப்பட்டதாகவும், பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுவது தவறு. சில தவறுகள் காரணமாக அவரின் மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியில், தகுந்த காரணங்களுக்காக அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் தேர்தல் அதிகாரி வேலூச்சாமியின் முடிவே இறுதியானது” என அவர் தெரிவித்தார்.
 
இதன் மூலம் விஷாலின் விவகாரம் முடிவிற்கு வந்துள்ளது.