வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (16:13 IST)

போராட்டத்தில் ஈடுபட்டாலும் ஈடுபடாவிட்டாலும் சம்பளம் கிடையாது ?...

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 9 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வர அவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வருவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போரட்டத்திற்கு மற்ற அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆகியோரிடமிருந்து ஆதரவுப் பெருகி வருவதை அறிந்த அரசு போராட்டக் குழுவினரின் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு 17 பி மெமோ  அனுப்புதல் மற்றும் அவர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என எண்ணியது. ஆனாலும் நேற்று முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போரட்டங்கள் நடந்தன. ஆனால் நேற்று போராடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில் சார்நிலைக் கருவூல ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், போராட்டத்தில் ஈடுபடும் மற்றும் ஈடுபடாத அரசு ஊழியர்கள்  மட்டுமில்லாமல் உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் அதிகாரிகளுக்கே சம்பளம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் ஊதியம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நாளை மாத இறுதி நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.