வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (17:29 IST)

ஹெச். ராஜா கூறுவது உண்மைதானா? - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பெரியார் சிலை குறித்து தனக்கு தெரியாமல் தனது பேஸ்புக் அட்மின் தவறான பதிவை இட்டு விட்டார் என்ற பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜவின் விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியாரின்  சிலை அகற்றப்படும் என்கிற ரீதியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்த கருத்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. 
 
மு.க.ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன், வீரமணி, சீமான் உள்ளிட்ட பலரும் ஹெச்.ராஜாவின் கருத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதேநேரம், அவரின் கருத்துக்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துவிட்டார்.  
 
அந்நிலையில், இதுபற்றி டெல்லியிலிருந்து விளக்கம் அளித்த ஹெச்.ராஜா "நான் விமானத்தில் வந்து கொண்டிருந்த போது எனது பேஸ்புக் அட்மின் இந்த பதிவை இட்டு விட்டார். நான் டெல்லி வந்து இறங்கியதும் அதைக் கண்டு நீக்கி விட்டேன். அட்மினையும் நீக்கி விட்டேன்” என விளக்கம் அளித்தார். ஆனாலும், அவரின் விளக்கத்தை தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட யாரும் ஏற்கவில்லை.

 
இந்நிலையில், ஹெச்.ராஜாவின் விளக்கத்தை பலரும் ஏற்க மறுத்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
 
எனது அட்மின் பெரியார் குறித்த பதிவை போட்டார். நான் அப்போது டெல்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். இறங்கியதும் நீக்கச் சொல்லி விட்டேன். அட்மினையும் நீக்கி விட்டேன் என்கிறார் எச்.ராஜா.
 
பெரியார் குறித்த முகநூல் பதிவு பதிவு செய்யப்பட்ட நேரம் காலை 9 மணி. எச்.ராஜாவின் டெல்லி இன்டிகோ விமானம் காலை 10.50. விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே விஷயம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. டெல்லியில் ராஜா கால் வைத்ததும், பிஜேபி தலைமையகத்திலிருந்து தொலைபேசியில் உரித்து எடுத்ததையடுத்து, பதிவை நீக்கச் சொன்னார் ராஜா.
 
காலை 9 மணி முதல், விமானம் கிளம்பும் 10.50 வரை, எச்.ராஜாவிடம் அவர் செல்போன் இருந்திருக்கும். அவருடைய ட்விட்டர் மற்றும் முகநூல் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை பார்த்து புளகாங்கிதம் அடைபவர்தான் ராஜா.
 
9 மணி முதல் 10.50 வரை, பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற பதிவை எச்.ராஜா பார்க்கவேயில்லை என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.