வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (18:29 IST)

நிர்மலா தேவியை நான் பார்த்தது கூட இல்லை - ஆளுநர் பேட்டி

நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேட்டியளித்துள்ளார்.

 
பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரம் பல்வேறு சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஆளுநர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
 
ஆடியோவில் பேசிய நிர்மலாதேவி பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கேட்கிறார்கள். ஆளுநர் வட்டம் வரை தனக்கு செல்வாக்கு உண்டு. எனக்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உண்டு என புகார் எழுந்தது.
 
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
 
என்னைக் கேட்காமல் பல்கலைககழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்தியது கண்டனத்திற்குரியது. சட்டவிதிகளின் படியே சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதம் காத்திருந்தது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விசாரணை நடத்தும் சந்தானம் ஐ.ஏ.எஸ் நேர்மையான அதிகாரி. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. நிர்மலா தேவி யார் என்பதே எனக்கு தெரியாது. அவரின் முகத்தை கூட நான் பார்த்ததில்லை. நான் பல நிகழ்ச்சிகளுக்கு செல்கிறேன். அங்கு பலர் வருவார்கள். என் மீது குற்றம் சாட்ட முடியாது. 
 
இந்த விஷயத்தில் சிபிஐ தேவையில்லை. எனக்கு 78 வயது ஆகிறது. கொள்ளுப்பேரன் இருக்கிறான். மாநில அரசு பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது. தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.