1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (16:04 IST)

தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: அரசு கொறடா அதிரடி!

தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: அரசு கொறடா அதிரடி!

எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.


 
 
தினகரன், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் அணியை இணைத்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவியையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வழங்கினார்.
 
இதனையடுத்து தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளார் தினகரன்.
 
இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், சபாநாயகர், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அரசு கொறடா ராஜேந்திரன் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது பேசிய கொறடா ராஜேந்திரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்கியதால் அவர்கள் அரசுக்கும், கட்சிக்கும் எதிராக நடந்துள்ளனர். இதனால் அவர்களை கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளேன் என கூறியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.