வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (12:57 IST)

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் செல்லும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்: முற்றுகிறது அரசியல் நெருக்கடி!

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் செல்லும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்: முற்றுகிறது அரசியல் நெருக்கடி!

தினகரன், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் அணியை இணைத்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவியையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வழங்கினார்.


 
 
இதனையடுத்து தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளார் தினகரன்.
 
புதுச்சேரியில் உள்ள எம்எல்ஏக்களை கிரண் பேடி மூலம் அங்கிருந்து விரட்ட முயற்சிகள் நடந்து வருவதாக நமது இணையதளத்தில் நேற்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரியில் இருந்து விரட்ட கிரண் பேடி நடவடிக்கை? என்ற தலைப்பில் கூறியிருந்தோம். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள அந்த சொகுசு விடுதியின் நிர்வாகம் அவர்களை 24-ஆம் தேதி இரவுக்குள் காலி செய்யுமாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதன் பின்னணியில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியும், பாஜக மேலிடமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினகரன் தரப்பு தனது ஆதரவு எம்எல்ஏக்களை வேறு வழியில்லாமல் பெங்களூருக்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல்கள் வருகின்றன.