வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (11:06 IST)

ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்ல மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி

உத்திர பிரதேசத்தில் கணவன் ஷாப்பிங் அழைத்து செல்ல மறுத்ததால் விரக்தியடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் தீபக் திவேதி. இவரது மனைவி தீபிகா. தீபக் - தீபிகா தம்பதியினருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தீபிகா மிகவும் சென்சிடிவ் டைப். சின்ன விஷயங்களுக்கெல்லாம் கணவனுடன் சண்டையிட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்வார்.
 
இந்நிலையில் தீபிகாவின் உறவினருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் தன்னை ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்லுமாறு தீபிகா தீபக்கிடம் கேட்டுள்ளார். தனது அலுவலகத்தில் வேலை இருப்பதால் ஞாயிற்றுக் கிழமை ஷாப்பிங் அழைத்துச் செல்வதாக கூறினார் தீபக். இதனால் கோபமடைந்த தீபிகா தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். வழக்கம் போல் நடைபெறும் சண்டை தானே என நினைத்துக் கொண்டு தீபக், ஹாலிலே படுத்து தூங்கியுள்ளார். காலை வெகு நேரமாகியும் தீபிகா கதவை திறக்காததால், தீபக் கதவை உடைத்து பார்த்த போது, தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தீபிகாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் தீபிகாவின் கணவரும், அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கும் சமூக ஆர்வலர்கள் பலர், இளம் தலைமுறையினரிடையே உள்ள சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து போதல் உள்ளிட்ட குணங்களை இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக கூறினர்.