1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2018 (15:44 IST)

மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர் கைது

விஜயவாடாவில் மாணவனை ஆசிரியர் கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆசிரியரின் தாக்குதல்களுக்கு ஆளாகி பல மாணவர்கள் பரிதாபமாக உயிரையும் இழக்கின்றனர்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவி கொண்டு வந்திருந்த பழச்சாறு பாட்டிலில் தன் சிறுநீரை கலந்து விட்டான். சிறிது நேரத்தில் மாணவியிடம் தான் செய்ததை கூறி, பழச்சாறை குடிக்க வேண்டாம் என கூறினான். ஆனால் மாணவி  உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமாரிடம் புகார் செய்தாள். 
 
இதையடுத்து ஆசிரியர் விஜயகுமார் மாணவனை அழைத்து விசாரித்தார். தான் செய்தது தவறென்றும் தன்னை மன்னித்துவிடும் படியும் மாணவன் உடற்கல்வி ஆசிரியரிடம் கெஞ்சியுள்ளான். விஜயகுமார் சிறுநீர் கலந்த பழச்சாறு முழுவதையும், மாணவனை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற மாணவன் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.