வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (10:54 IST)

பிளஸ் 1 மாணவனை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியர்

கரூர் அருகே தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்  பிளஸ்1 மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவதும், மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வேலூரில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் பள்ளி தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளேயே கரூரில் ஒரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
கரூர் மாவட்டம் மணவாடியில் ஆசிரம மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஹரிக்கூர் ரகுமான் என்ற மாணவன் பிளஸ்-1 படித்து வருகிறார்.  அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். ஹரிக்கூர் ரகுமான் உடற்கல்வி ஆசிரியரிடம் தெரிவிக்காமல் பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இதனால் ஹரிக்கூர் ரகுமானை, பன்னீர்செல்வம் அவ்வப்போது கண்டித்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று  ரகுமானுக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் பன்னீர்செல்வம் ஹரிக்கூர் ரகுமானை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.. இதில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பள்ளி ஊழியர்கள், காயமடைந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மணவாடி போலீஸார் உடற்கல்வி ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.