1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஜனவரி 2024 (09:20 IST)

முதல்வர் பதவிக்கு ஆபத்து.. கைது செய்ய திட்டம்! – ஹேமந்த் சோரனின் ப்ளான் என்ன?

Hemant Soren
ஜார்கண்ட் முதல்வரான ஹேமந்த் சோரன் மீது மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது.



ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஜார்கண்ட் முக்தி மோர்சா என்ற அரசியல் கட்சியை நடத்தி வருபவர் ஹேமந்த் சோரன். கடந்த 2019ம் ஆண்டில் ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு ஹேமந்த் சோரன் முதல்வராக ஆட்சி அமைத்தார். ஆட்சி காலத்தில் ஹேமந்த் சோரன் ரூ.600 கோடி மதிப்பிலான நிலமோசடி குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜனவரி 27 – 31க்குள் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விசாரணைக்கு பதில் அளிக்க உள்ளார் ஹேமந்த் சோரன். ஆனால் அவர் இன்று கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டு முதல்வர் பதவியை இழக்கும் பட்சத்தில் தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக பதவியேற்க செய்ய வேண்டும் என சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி ஆட்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம் ஹேமந்த் சோரன். ஆனால் ஜார்கண்டில் சட்டமன்ற ஆட்சி நவம்பரில் முடிய உள்ளது. இதற்கிடையே இடைத்தேர்தல் நடத்துவது சந்தேகமே என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. எனினும் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக இருப்போம் என கூட்டணி கட்சியான காங்கிரஸின் நிர்வாகிகள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

Edit by Prasanth.K