வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (20:14 IST)

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அமர்வு

அயோத்தி நிலப் பிரச்சனையை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அமர்வை நியமித்து உச்சநீதிமன்றம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அமர்வு இந்த வழக்கை ஜனவரி 10-ம் தேதி (நாளை மறுநாள்) விசாரணைக்கு எடுக்கும்.
 
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றார்.
 
அந்த மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, இந்த மனுக்களைப் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த சூழ்நிலையில் இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வு தொடர்பான உத்தரவு வந்திருக்கிறது.
 
திரண்ட இந்து அமைப்பினர்:
இதற்கு மத்தியில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத் டிசம்பர் 10-ம் தேதி கூட்டம் நடத்தியது.
 
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டுவருவதற்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்திருப்பதாக அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளரான சுரேந்திர ஜெயின் அப்போது தெரிவித்திருந்தார்.