1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (13:00 IST)

'சர்கார்' வழக்கில் இன்று தீர்ப்பு: சரமாரியாக நீதிபதிகள் கேள்வி கேட்டதால் பரபரப்பு

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படத்தில் அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் காட்சி இருப்பதாக கூறி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முருகதாஸ் முன் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில்  தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

இன்றைய விசாரணையின்போது அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்துள்ள நிலையில், விரோதத்தை தூண்டியதாக இந்த படம் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் கேள்வி கேட்டு திணறடித்தனர்.

அதுமட்டுமின்றி வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அந்த காட்சிகளை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏன் எடுக்க வில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது

இறுதியில் திரைப்படத்தை, திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகல் வழங்குவதாக அறிவித்தனர்