வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (08:08 IST)

கட்சியில் போய் சேர்ந்து கொள்ளுங்கள் – அதிகாரிகளை விளாசிய நீதிபதிகள்

உரிய அனுமதியின்றி அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள் என உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி முழுவதும் கட்சி சார்பின்றி பேனர்களால் நிறைந்து வழிகிறது. இப்படி  வைக்கப்படும் பேனர்கள் பெரும்பாலானவை முறையான அனுமதியின்றி வைக்கப்படுபவைதான். வைக்கப்படும் பேனர்களில் அனுமதி அளித்த அதிகாரியின் பெயர், பேனர் வைப்பவரின் பெயர் மற்றும் அனுமதிக்கப்பட்ட காலம் ஆகியவை இடம்பெறவேண்டும் என்ற விதியையும் யாரும் பின்பற்றுவதில்லை. இத்தகைய பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

அத்தகையப் பேனர்கள் வைப்பவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று கூறி டிராபிக் ராமசாமி தரப்பில் பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் விதிமீறல் பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாக்கல செய்யப்பட்ட அறிக்கையில் ‘அரசியல் கட்சியினர் வைத்த பேனர்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், அதுதொடர்பாக யார் மீதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று பெரும்பாலான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சம்மந்தப்பட்டவர்களே முன்வந்து பேனர்களை அகற்றிவிட்டதால் அதனால் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை’ எனவும் கூறப்பட்டது.

இந்த பதிலால் அதிருதியடைந்த நீதிபதிகள் ‘கடந்த 5 வருடங்களாக அரசின் பதிலால் சோர்ந்து போய் உள்ளதாகவும், பேனர்களை அவர்களாகவே அகற்றிவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாமா?. பேனர் வைப்பவர்கள் மீது கட்சி பாகுபாடில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அர்சியல் கட்சிகளில் சேர்ந்துகொள்ளலாமே ?’ என கேள்வியெழுப்பியுள்ளனர்.